கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் குற்றிப்புரம் அருகே, குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பதப்படுத்தப்பட்ட உணவைச் சாப்பிட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையான உடல்நலப் பாதிப்புக்குள்ளானதில், 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
எடச்சலம் பகுதியைச் சேர்ந்த ஹக்கீம் - ஷஹ்லா தம்பதியின் மகள் லஸ்னா (7) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
ஹக்கீமின் குடும்பத்தினர் சம்பவத்தன்று மாலை, குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பதப்படுத்தப்பட்டிருந்த உணவைச் சாப்பிட்டுள்ளனர்.
உணவு உட்கொண்ட சிறிது நேரத்திலேயே குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிறுமி லஸ்னா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற குடும்ப உறுப்பினர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உணவு கெட்டுப்போனதே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என்று முதற்கட்டமாகச் சந்தேகிக்கப்படுகிறது.
தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், ஹக்கீமின் வீட்டிற்குச் சென்று அவர்கள் சாப்பிட்ட உணவு மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
