இலங்கையின் பாடசாலைக் கல்விப் பாடத்திட்டத்தில் ‘சட்டம்’ என்ற பாடத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை வழங்குமாறு இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்திற்கு கல்வி அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.
மாணவர்களிடையே சட்ட அறிவு மற்றும் அதன் முக்கியத்துவத்தை வளர்க்கும் நோக்கில், ஆரம்பக் கல்வியில் இதனை கட்டாயப் பாடமாகவும், உயர்தரத்தில் (Advanced Level) விருப்பப் பாடமாகவும் அறிமுகப்படுத்த வேண்டும் என 2025ஆம் ஆண்டு இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிந்திருந்தது.
பாடத்திட்ட மீளாய்வு நடவடிக்கைகள் தொடங்கும் போது, இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பல்கலைக்கழகங்களின் சட்டப் பீட பிரதிநிதிகள் ஆலோசனைகளுக்காக அழைக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சு உறுதி அளித்துள்ளது.
இருப்பினும், 2026ஆம் ஆண்டிற்கான சாதாரண தர (Ordinary Level) பாடத்திட்டங்களில் இந்த மாற்றம் உள்வாங்கப்படவில்லை.
புதிய உயர்தர பாடத்திட்ட தொகுதிகள் தயாரிக்கப்படும் போது இந்த யோசனை பரிசீலிக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் சத்துர கலேன தெரிவித்துள்ளார்.
உலகின் பல நாடுகளில் பாடசாலை மட்டத்திலேயே சட்டம் ஒரு பாடமாக கற்பிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ள சங்கம், இலங்கையின் தற்போதைய சமூகச் சூழலில் மாணவர்களுக்கு சட்ட ரீதியான விழிப்புணர்வு அவசியமான ஒன்றாக மாறியுள்ளது என வலியுறுத்தியுள்ளது.
