புத்தளம் காவல்துறையினர் இன்று (22) புத்தளம், தில்லியடி அல்-காசிம் கிராமத்திற்கு அருகிலுள்ள சாலையின் அருகே முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
புத்தளம் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவின்படி, இறந்தவர் 72 வயதான அப்துல் லத்தீப் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் புத்தளம், தில்லையடியில் வசிக்கும் ஐந்து குழந்தைகளின் தந்தை ஆவார்.
நேற்று இரவு (21) வீட்டில் இருந்த போது, யாரோ ஒருவர் அவரை வாடகைப்பயணம் (Hire) ஒன்றுக்கு அழைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.காலையில் அவர் திரும்பி வராததால், அவரது குடும்பத்தினர் புத்தளம் காவல்துறையில் புகார் அளித்தனர்.
பின்னர் அவரது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள கால்வாய் அருகே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. காணாமல் போயுள்ள முச்சக்கரவண்டியை கொலையாளிகள் கடத்திச் சென்றிருக்கலாம் என நம்பப்பட்ட நிலையில் பின்னர் அந்த முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டது.
ஒரு வழிப்போக்கர் உடலைக் கண்டு உள்ளூர்வாசிகளுக்கு தகவல் அளித்தார், அதன் பிறகு காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.
