யாழ். மாவட்ட காற்றின் மாசாக்கத்துக்கு உள்ளூர் காரணிகள் பல இருந்தாலும் எல்லைதாண்டும் மாசாக்கமே இதற்கு பிரதான காரணியாக இருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, இது சுவாச நோய்களை அதிகரிக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை முன்னெடுத்திருந்த அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில் -
இலங்கையின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ் மாவட்டத்தின் காற்றின் தரம் மிக மோசமாக காணப்படுகின்றது.
குறிப்பாக வளித் தரக் குறிகாட்டி மிக மோசமாக இருக்கின்றது. அத்துடன் கொழும்பு மாவட்டத்துக்கு நிகரான மாசுறுதலுடன் இது இருக்கின்றது.
இதற்கு இந்தியா போன்ற பெரும் நிலத்திலிருந்து வருகின்ற வளிமண்டல மாசுறல்களும் முக்கிய காரணமாக இருக்கின்றது.
அதனடிப்படையில் யாழ்ப்பாணத்தின் காற்றுத்தர குறிகாட்டியை பொறுத்தகவில் அது பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு வந்துள்ளது.
இதனால் வளிமண்டல உணர்திறன் மிக்கவர்களுக்கு சுவாசம் தொடர்பான நோய்கள் குறிப்பாக மூச்சுத் திணறல் நோய்கள் அதிகரிப்பதற்கு வாய்புகள் இருக்கின்றது என்றும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
