மொனராகலை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதாக மாவட்ட இடர் முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
இம் மாவட்டத்தில் நேற்று (7) முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பிரதேசத்தில் பல இடங்களில் உள்ள வீடுகள் முழுமையாகவும் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு வீசிய பலத்த காற்றினால் வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவில் மஹவெலமுல்ல பகுதியில் மரங்கள் வீதியில் விழுந்ததில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
தொடரும் மழை மற்றும் காற்றினால் பிரதேசத்தில் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் மிக அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவம் நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மொனராகலை செயலகப் பிரிவிலுள்ள போஹிட்டிய பகுதியில் பலத்த காற்று காரணமாக வீட்டு ஒன்றின் மீது பெரிய மரம் விழுந்ததில் வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.
மொனராகலை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மிகக் கவனமாக இருக்குமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ள நிலையில் இம் மாவட்டத்தின் பிபிலை செயலகப் பிரிவுக்கு முதற் கட்ட மண்சரிவு எச்சரிக்கையினை வானிலை அவதான நிலையம் விடுத்துள்ளது.
