கடந்த 27 ம் திகதி ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போயிருந்த நபர் ஒருவரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
50 வயதுடைய ஆக்கரத்தன்ன பெல்காத்தன்ன முதலாம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 27 ம் திகதி ஏற்பட்ட மண்சரிவில் பெல்காத்தன்ன ஆக்கரத்தன்ன முதலாம் கட்டைப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் மேற்குறிப்பிட்ட நபர் காணாமல் போயிருந்த நிலையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிறிய ஓடை ஒன்றிற்கு அருகாமையில் மனித உடல் பாகங்கள் சிலவற்றை அவதானித்த நபர் ஒருவர் உடன் கிராம சேவகர் ஊடாக பசறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பசறை பொலிஸார் குறித்த உடல் பாகங்களை மீட்டதாகவும், குறித்த உடல் பாகங்கள் முன்னாள் இராணுவ வீரரான தனது கணவரின் உடல் பாகங்கள் என மனைவி ஏற்றுக்கொண்ட தாகவும் பின்னர் உடல் பாகங்கள் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தற்போது குறித்த உடல் பாகங்கள் பசறை பகுதியில் உள்ள மலர் சாலையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
