யாழில் காவல்துறையினர் துரத்தி வந்த கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து நேற்று (24) இரவு 8.15 மணியளவில் நவாலி மூத்தநயினார் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ள நிலையில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மானிப்பாய் காவல்துறையினர் கார் ஒன்றினை துரத்தி வந்தனர்.
அந்த கார் மூத்தநயினார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள தையல் கடை மற்றும் வேறு ஒரு கடையின்மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.இதன்போது தையல் கடையில் இருந்து கதைத்துக்கொண்டிருந்த மூவர் படுகாயமடைந்ததுடன் அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, படுகாயமடைந்த மூவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டனர்.காரை செலுத்தி வந்த சாரதி மானிப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் இரண்டு கடைகளும் மற்றும் மூன்று தையல் இயந்திரங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மானிப்பாய் காவல்துறையினர் துரத்தி வந்தலாலேயே வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் இவ்வாறு விபத்தை ஏற்படுத்தியதாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

