மனைவியின் தகாத உறவு தாங்க முடியாமல், இரு குழந்தைகளின் தந்தையான கணவர், மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்துவிட்டு தானே போலீசாருக்கு போன் செய்து தகவல் தெரிவித்த கணவர், சரணடைய போவதாக கூறிவிட்டு தப்பியோட முயன்ற நிலையில், செல்போன் டவர் லொகேஷன் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், மாடம்பாக்கம் தாய்மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் கோபால் ராஜ் (வயது 30). இவருக்கு பரமேஸ்வரி (26) என்றபெண்ணுடன் 2014-ம் ஆண்டு திருமணம் ஆகி, 8 வயது மற்றும் 6 வயது கொண்ட இரு மகள்களும் உள்ளனர். கோபால் ராஜ் அதே பகுதியில் மீன் கடை நடத்தி வருகிறார். தனது மனைவி பரமேஸ்வரி பலருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாகவும், ஒரே நேரத்தில் பல கள்ளக்காதலர்களுடன் வீடியோ கால் மூலம் பேசி காதலை வளர்த்து வந்ததாகவும் கோபால் ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். பலமுறை கண்டித்தும் மனைவி திருந்தவில்லை எனக் கூறி, மன உளைச்சலில் தனது கைகளால் பரமேஸ்வரியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். நேற்று முன்தினம் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்த பின்னர், தனது இரு மகள்களையும் திருநின்றவூரில் உள்ள உறவினர் வீட்டில் சேர்த்துவிட்டு, மணிமங்கலம் காவல் நிலையத்துக்கு போன் செய்து, "சார்.. என்.. பொண்டாட்டிய.. கொலை பண்ணிட்டேன்.. சார்" என அதிர்ச்சி தகவல் தெரிவித்தார் கோபால் ராஜ். போலீசார் செல்போனிலேயே விசாரணை நடத்தியபோது, மனைவியின் தகாத நடத்தை குறித்து முழு விவரங்களை கூறிய அவர், காவல் நிலையத்தில் சரணடைய போவதாக தெரிவித்தார். ஆனால், சரணடைய வராமல் தலைமறைவானார். போலீசார் அடித்து துன்புறுத்துவார்கள் என பயந்துதான் தப்பியதாக விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், பரமேஸ்வரியின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், செல்போன் டவர் லொகேஷன் உதவியுடன் கோபால் ராஜை உடனடியாக கைது செய்தனர். தகாத உறவுக்கு எதிராக கோபத்தில் இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் உறுதியாகியுள்ளது. இரு சிறு குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு நடந்த இந்த சம்பவம், மாடம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் குடும்ப உறவுகளின் மீதான நம்பிக்கையை குலைக்கும் வகையில் உள்ளன. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
