இலங்கைப் போக்குவரத்துக்குச் சொந்தமான பேருந்தும் முச்சக்கரவண்டியும் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துச் சம்பவம் நாவலப்பிட்டி, போகஹவத்தை வழியாக கொத்மலை மகாவெலிகம வீதியில் உள்ள பெல்டன் அம்பகஸ்பிட்டிய பகுதியில் இன்று காலை இடம்பெற்றது.
அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் கவிழ்ந்து எதிர்த்திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை சொந்தமான பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் மற்றுமொருவரும் படுகாயமடைந்த நிலையில் கொத்மலை மல்தெனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
