இரத்தினபுரி, திரிவானகெட்டிய பகுதியில் இன்று (31) காலை லொறி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இரத்தினபுரியிலிருந்து எம்பிலிபிட்டி நோக்கி, கட்டிட நிர்மாணப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியும், மொனராகலையிலிருந்து ஹொரணை நோக்கிப் பயணித்த வேனும் நேருக்கு நேர் மோதியுள்ளன.
விபத்தில் வேன் சாரதி படுகாயமடைந்துள்ளார். வேனில் பயணித்த மேலும் மூவரும் காயமடைந்துள்ளனர். அத்துடன், வேனுடன் மோதிய லொறி கவிழ்ந்ததில் லொறி உதவியாளரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பகுதியானது அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறும் ஓர் இடமெனப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். விபத்துத் தொடர்பில் இரத்தினபுரி போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
