விபத்துகள் அதிகரிப்பதனால் கட்டாக்காலி கால்நடைகளிற்கு பத்தாயிரம் ரூபா அறவிட தீர்மானித்துள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வேலாயுதம் கரிகாலன் தெரிவித்தார் .
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்பாக இன்றையதினம் (21.08.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கால்நடைகளால் புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், விசுவமடு, தேவிபுரம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் கட்டாக்காலி கால்நடைகளின் நடமாட்டம் வீதிகளில் அதிகரித்துள்ளமையால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதனால் விபத்துக்களும் அதிகளவில் ஏற்பட காரணமாக இருக்கின்றது.
கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நோக்கில்
சபை அமர்வில் தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தோம் 14பேர் ஆதரவளித்திருந்தார்கள். கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கு கால்நடை உரிமையாளர்களிடம் நிதியினை அறவிட சபை தீர்மானம் எடுத்திருக்கின்றது.
பெரிய மாட்டிற்கு 5000 ரூபாவும், சிறு கன்றுகளுக்கு 3000 தண்டப்பணமாக சபையில் இருந்தது. ஆனால் தற்போது 10,000 ரூபாவாக தீர்மானித்து இருக்கின்றோம். அதனை மீண்டும் பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றோம்.
சபைக்கு கிடைக்கும் வருமானத்தினை வைத்தே தெருவிளக்குகள் பொருத்துதல், அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம். தற்போது 12 வட்டாரங்களிலும் பழுதடைந்த தெருவிளக்குகளை திருத்தங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.
புதுக்குடியிருப்பு பிரதேசசபை 2023 ஆம் ஆண்டிலிருந்து தேர்தல் நடைபெறாமல் பிற்போடப்பட்ட நிலையிலிருந்தது. இதனால் பிரதேசசபை செயலாளரின் கீழ் இயங்கி வந்தது. கடந்த மே மாதம் 6ஆம் திகதி உள்ளூராட்சி சபை தேர்தல் நிறைவடைந்து யூன் மாதம் 3ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேசபையின் நிர்வாக பொறுப்புக்களை உத்தியோக பூர்வமாக எடுத்திருந்தோம். அதன் பின்னர் 2025 ஆம் ஆண்டுக்கான வரவவு செலவு திட்டத்திமானது பிரதேசசபை செயலாளரின் அதிகாரத்தின் கீழ் நிறுவப்பட்டிருந்தது.
அதன்பின்னர் பிரதேசசபை தவிசாளர், உறுப்பினர்கள் சபைத்தீர்மானங்கள், அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி வரவு செலவு திட்டத்திற்கமைய அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம் என்றார்