முல்லைத்தீவு, மன்னாரில் உடனடியாக தீயணைப்புப் பிரிவை நிறுவுங்கள் - ரவிகரன் எம்.பி சபையில் வலியுறுத்து


வன்னியில் முல்லைத்தீவு மற்றும், மன்னார் மாவட்டங்களில் தீயணைப்பு சேவை நிலையம் இதுவரை நிறுவப்படாதுள்ளமையைச் சபையில் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடைத்தொகுதிகளும் வீடுகளும் பற்றி எரியும் போது வாளிகளில் நீர் அள்ளி ஊற்றும் எமது அவல வாழ்வில் இந்த அரசு பேசும் சமத்துவம் எங்கே உள்ளது எனவும் கேள்வி எழுப்பினார். 

அதேவேளை வன்னியில் முல்லைத்தீவு மற்றும், மன்னார் மாவட்டங்களில் உடனடியாக தீயணைப்புப்புப் பிரிவை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். 

பாராளுமன்ற அமர்வில் இன்று (17.06.2025) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

கௌரவ தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே 

பாதுகாப்பாக வாழுதல் நாட்டில் வாழும் அனைவர்க்குமான உரிமை. நாட்டில் உள்ள 25 மாவட்டத்தினர்க்கும் சமத்துவ அடிப்படையில் கிடைக்கப்பட வேண்டிய வசதி. சமத்துவ அடிப்படையிலான வள பரவலாக்கத்தை கொள்கை அளவில் வலியுறுத்தும் இந்த அரசு நான் சார்பாகும் வன்னி மாவட்டத்திற்கு சமத்துவ வளப்பகிர்வை மேற்கொள்வீர்களா என்பது எனது கேள்வி. 

வன்னி மாவட்டத்தில் முல்லைத்தீவிலும் மன்னாரிலும் இதுவரை ஒரு தீயணைப்பு சேவை நிலையம் கூட இல்லாதது எமக்கு கவலையளிக்கிறது. 

நெடுங்காலமாக போரின் வடுக்களைச் சுமந்துவாழும் மக்களை முற்றுமுழுதாகக் கொண்ட மாவட்டம் முல்லைத்தீவு. மக்களையும் காலாகாலமாகச் சேர்த்த சொத்துகளையும் இழந்து இப்போது மெல்ல மெல்ல மண்ணையும் கூட இழந்துவருகிறோம். 

இந்த அரசின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அண்மைய அபிவிருத்தித் திட்டங்களை நாம் வரவேற்கிறோம். அத்தோடு இன்னமும் தீராதுள்ள எங்களின் அத்தியாவசிய தேவைகளை விரைவாக நிறைவேற்றித் தரவேண்டியதும் உங்களின் கடன் என்பதை இந்தப் பேரவையில் நினைவுபடுத்துகிறேன். 

எம் மக்களின் இயல்பிருப்புக்கும் நிலையான வளர்ச்சிக்கும் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றான தீயணைப்பு சேவையை விரைவாக முல்லைத்தீவிலும் மன்னாரிலும் நிறுவுங்கள். 

கடைத்தொகுதிகளும் வீடுகளும் பற்றி எரியும் போது வாளிகளில் நீர் அள்ளி ஊற்றும் எங்கள் அவல வாழ்வில் நீங்கள் பேசும் சமத்துவம் எங்குள்ளது? போரில் அனைத்தையும் இழந்து வெறுங்கையோடு சொந்த ஊர் மீண்டு சிறுகச்சிறுக சேர்த்த சொத்துகள் எல்லாம் தீயில் எரியும் போது கிளிநொச்சியில் இருந்தோ வவுனியாவில் இருந்தோ தீயணை ஊர்திகள் வந்து சேரும் வரை எரிகிற நெருப்பு காத்திருக்குமா? 

2024ஆம் ஆண்டின் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவின் படி அண்ணளவாக 1,22,542 மக்கள் முல்லைத்தீவில் வாழ்கின்றனர். இவர்களும் இந்த நாட்டின் மக்கள் தாம். இந்த நாட்டில் மற்ற குடிமக்களைப் போல எம் மக்களுக்கும் அதே அளவிலான பாதுகாப்பு தேவை. 

முல்லைத்தீவு 2617 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டது . விவசாயம் மற்றும் மீன்பிடியை முதன்மையான வாழ்வாதார மூலங்களாக கொண்டு வாழும் மக்களைக் கொண்டது. ஒரு தீ விபத்து, பல ஆண்டுகால கடின உழைப்பை அழித்து குடும்பங்களை மீண்டும் வறுமையில் தள்ளும். 

கடும் வரட்சியை எதிர்நோக்கும் மாவட்டங்களுள் முல்லைத்தீவு ஒன்று. வரட்சி, தீ விபத்துகளின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கும். காட்டுத்தீ விரைவாகவும் கட்டுப்பாடில்லாமலும் பரவி இயற்கைக் காடுகளையும் விவசாய நிலங்களையும் வீட்டு மரங்களையும் அச்சுறுத்துகிறது. 

கடும்வரட்சியால் பனை மரங்கள் தீப்பற்றி எரிகின்றன. காடுகள் தீப்பற்றி பல ஏக்கர்கள் எரிந்து அழிந்து போகின்றன. 160,000 கெக்டேயர் இயற்கைக் காடுகளைக் கொண்ட முல்லைத்தீவில் 2024 இன் படியான புள்ளிவிபரத்துக்கு அமைவாக 647 கெக்டேயர் இயற்கைக் காடுகள் அழிந்துள்ளன. இவற்றை விட, மின்னொழுக்குகளால் கடைகள் தீப்பற்றி எரிகின்றன. நாயாறு, கொக்கிளாய் பகுதிகளில் வாடிகள் கூட தீப்பற்றி முற்றாக எரிந்து அழிந்துள்ளன. பகல் நேரங்களில் ஏற்படும் தீப்பற்றல்களை விட இரவு நேரம் ஏற்படும் தீப்பற்றல்களால் அழிவுகள் அதிகம். 

இது ஒரு புதிய பிரச்சினை அல்ல. முல்லைத்தீவில் தீயணைப்பு சேவையை ஏற்படுத்துங்கள் என்ற கோரல் இந்த சபைக்குள்ளும் வெளியேயும் பலமுறை எழுப்பப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு முன்னாள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அப்போதைய பிரதமர் முல்லைத்தீவில் ஒரு வாரத்திற்குள் தீயணைப்புப் படை நிறுவப்படும் என்று உறுதியளித்ததை இச்சபையில் நினைவுகூர்கிறேன். இப்போது ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போதும் இந்த அடிப்படை சேவைக்காக சமத்துவத்துக்காக நாங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றோம். முல்லைத்தீவில் தீ விபத்து ஏற்பட்டால், அருகில் உள்ள தீயணைப்புப்பிரிவு வவுனியாவில் இருந்து சுமார் 80 கிலோமீற்றர் பயணிக்கவேண்டும். சாலை நிலைமைகள் மற்றும் ஏனைய சவால்களைக் கருத்தில் கொண்டால் இரண்டு மணிநேரம் அல்லது அதற்கும் மேலான பதிலளிப்பு நேரத்தை இது குறிக்கிறது. தீ விபத்து ஏற்பட்டால் கடக்கின்ற ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. வவுனியாவில் இருந்தோ கிளிநொச்சியில் இருந்தோ உதவி வரும் நேரத்திற்குள் விலைமதிப்பற்ற உயிர்கள், சொத்துகள், வாழ்வாதாரங்கள் என அனைத்தும் இழக்கப்படலாம். 

மாண்புமிகு உறுப்பினர்களே. விளைவுகள் கடுமையாக உள்ளன. 

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு தீயணைப்புப் பிரிவேனும் இயங்குவதற்கு இங்குள்ள ஒவ்வொருவரும் குரல் கொடுங்கள். பாதுகாப்பாக வாழும் உரிமை நாட்டில் உள்ள அனைவர்க்கும் சமன் என்பதற்காக குரல் கொடுங்கள். மீண்டுவரும் முல்லைத்தீவு மீள மீள அழிவுக்கு உள்ளாகாது இருக்க குரல் கொடுங்கள். 

தீயணைப்பு சேவைகளை நிறுவுதல் ஆடம்பர வசதியல்ல. மாறாக அது பேரம் பேச முடியாத ஒரு கட்டாயத்தேவை. 

எனவே இந்த நாடாளுமன்றம், உடனடியாகவும் தீர்க்கமானதாகவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நான் பணிவுடனும் உறுதியுடனும் கேட்டுக்கொள்கின்றேன். உறுதிமொழிகளுக்கு அப்பால் செயற்பாட்டு அடிப்படையில் இதற்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்துங்கள். 

முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு நிலையத்தை நிறுவுவதற்கு முன்னுரிமை கொடுங்கள். முல்லைத்தீவில் மற்றொரு பேரழிவு, தீ விபத்து ஏற்படும் வரை காத்திருக்கவேண்டாம். 

பாதுகாப்பான வாழ்வில் எந்தவொரு மாவட்டமும் பின்தங்கி இருக்கக்கூடாது என்பதை உறுதிசெய்வது நமது கூட்டுப்பொறுப்பு - என்றார்




கருத்துரையிடுக

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள் .

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.