இலங்கையில் இளைஞர்களிடையே புகைத்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம்: ஆய்வு முடிவுகள் வெளியீடு!
இலங்கையில் 15 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 11.6% பேர் தீவிரமாக புகைபிடிப்பதாகவும், 18% பேர் தீவிரமாக மது அருந்துவதாகவும் அண்மைய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் சேவைகளை வழங்குவதன் மூலம் மதுபானம் மற்றும் புகையிலை பயன்பாட்டைக் குறைப்பதை ஊக்குவிக்கும் வள மையமான மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC), 11 மாவட்டங்களில் இந்த ஆய்வை நடத்தியது.
"பெரும்பாலான இவ்வகையான பழக்கவழக்கங்கள் சமூகக் ஒன்று கூடல்களில் ஆரம்பமாகியுள்ளன" என்று ADIC கூறுகிறது. "இதேபோன்ற ஆய்வுகள், சகாக்களின் அழுத்தம் மற்றும் தாக்கம் இந்த நடத்தையைத் தூண்டும் முக்கிய காரணியாகும் என்பதைக் கண்டறிந்துள்ளன. ஊடகங்கள் மற்றும் பிற தளங்கள் மூலம் புகையிலைத் தொழிலின் அனைத்து வகையான விளம்பரங்களும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களிடையே தங்கள் தயாரிப்புகளுக்கு ஒரு நேர்மறையான பிம்பத்தை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றன."
இருப்பினும், கடந்த பத்தாண்டுகளில் மதுபானப் பயன்பாட்டின் ஒட்டுமொத்தப் போக்கு குறைந்து வருவதாக ADIC தெரிவித்துள்ளது. "2022 இற்குப் பிறகு மொத்த மதுபான உற்பத்தியில் ஒரு கூர்மையான சரிவு மற்றும் கலால் வரி வருவாயில் தொடர்ச்சியான அதிகரிப்பு ஆகியவற்றை இந்த தரவுகள் காட்டுகின்றன. இது மதுபானப் பொருட்களுக்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான கலால் வரிக் கட்டண அதிகரிப்பால் பாதிக்கப்பட்டிருக்கலாம்."
ஆய்வின் முடிவுகளின்படி, ஆய்வு பங்கேற்பாளர்களில் 36.5% பேர் புகைபிடிப்பதை நிறுத்தியுள்ளனர். மேலும், ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நேரத்தில் தற்போதைய புகைப்பிடிப்பவர்களில் 20.9% பேர் புகைபிடிப்பதை குறைத்துள்ளனர். மேலும் 27.9% பேர் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நேரத்தில் மதுபானப் பழக்கத்தை வெற்றிகரமாக நிறுத்தியுள்ளனர்.
மத்திய வங்கியின் தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களின்படி, 2023 ஆம் ஆண்டில் சிகரெட்டுகள் மீதான கலால் வரியில் 20% அதிகரிப்பு, சிகரெட் கலால் வரி மூலம் அரசாங்க வருவாயை 7.7 பில்லியன் ரூபாவால் அதிகரிக்க பங்களித்துள்ளது. அதே நேரத்தில் சிகரெட் உற்பத்தி 521.5 மில்லியன் சிகரெட்டுகளாகக் குறைந்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட 18% குறைவு.
கல்வி நிறுவனங்களின் 100 மீட்டர் சுற்றளவுக்குள் புகையிலை விற்பனையைத் தடை செய்வது, NATA சட்டத்தை திறம்பட செயல்படுத்துவது, தற்காலிக மதுபான உரிமங்கள் வழங்குவதை நிறுத்துவது மற்றும் சுற்றுலாத் துறையின் சாக்கில் மதுபான உரிமங்கள் வழங்குவதை நிறுத்துவது எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று ADIC தெரிவித்துள்ளது.