கிருஷ்ணகிரியில், கள்ளக்காதல் விவகாரத்தில் நாடக கலைஞர் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வரட்டனப்பள்ளி அருகே, தேசுப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நாடக கலைஞர் வெங்கடேசன், 45; கிருஷ்ணகிரி பழைய சப் - ஜெயில் சாலையில், சலவை கடை வைத்திருந்தார்.
இவருக்கும், வேப்பனஹள்ளி அருகே தடத்தரை கிராமத்தை சேர்ந்த சின்ன நரசிம்மன் என்பவரின் மனைவிக்கும் கள்ளக்காதல் இருந்தது.
பலமுறை எச்சரித்தும் கள்ளக்காதலை கைவிடாததால், வெங்கடேசனை கொல்ல சின்ன நரசிம்மன் திட்டமிட்டார்.
கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே, சேலம் சாலையில், டூ - வீலரில் நேற்று மதியம், 2:45 மணிக்கு வந்த வெங்கடேசனை வழிமறித்த சின்ன நரசிம்மன், அரிவாளால் சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த வெங்கடேசன் உயிருக்கு போராடினார். அருகிலிருந்த பொலிஸார் சின்ன நரசிம்மனை பிடித்து, புறக்காவல் சிறையில் அடைத்தனர்.
வெங்கடேசனை கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.