12 நாட்களாக நீடித்த பதற்றமான போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன.
முன்னதாக ஈரான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருந்த நிலையில் தற்போது இஸ்ரேலும் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முக்கியமான முடிவு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மத்தியஸ்தத்தால் முடிவு செய்யப்பட்டதாகவும், அவர் இன்று அதிகாலை தனது சமூக ஊடக பக்கத்தில் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 12 நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், ஈரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேலின் பீர்ஷெபா நகரத்தில் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் தரப்பு தெரிவித்தது.
இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் டெஹ்ரானில் உள்ள அரசு இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், டிரம்ப் நேற்று (திங்கள்கிழமை) ஒரு முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தார், இதன் மூலம் இரு நாடுகளும் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி அமைதியை மீட்டுவதற்கு உடன்பாடு அடைந்துள்ளன.
இந்த ஒப்பந்தம் தற்போது அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளதால், உலக நாடுகள் இதன் அமல் செயல்பாடு மற்றும் நீடித்த அமைதியை உறுதி செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றன. டிரம்ப் தனது அறிவிப்பில், "இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் இப்போது அமுலில் உள்ளது. அதை மீற வேண்டாம்" என்று எச்சரித்துள்ளார்.
மேலும், ஈரான் தனது இறுதி ஏவுகணை தாக்குதலை நிறுத்தியதாகவும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதற்கு உடன்பாடு தெரிவித்ததாகவும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றத்தை குறைக்க வாய்ப்புள்ளதாகவும், ஆனால் ஈரானின் அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திறன்கள் முழுமையாக அகற்றப்பட்டதா என்பதில் இன்னும் சந்தேகங்கள் நீடிக்கின்றன.