தஞ்சாவூரில் பெண்ணின் உடலிலிருந்து 27 கிலோ எடையுள்ள நார்த்திசு கட்டியை அகற்றி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தஞ்சாவூரில் 45 வயதான பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்து சினைப்பை மற்றும் 27 கிலோ எடை கொண்ட நார்த்திசு திரளை அகற்றி சிக்கலான அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
நார்த்திசு திரள் என்பது கர்ப்பப்பையிலிருந்து உருவாகிற, ஒரு புற்றுநோய் அல்லாத திசு வளர்ச்சியாகும். தசை மற்றும் நார்த்திசுக்களால் உருவானதாக இந்த கழலைக் கட்டி இருக்கும்.
தசைத்திசுக் கட்டிகள் (லியோமியோமாஸ்) எனவும் இவை அழைக்கப்படுகின்றன. 2.5 லட்சம் நபர்களில் ஒருவருக்கு மட்டுமே இந்தளவிற்கு தசைத்திசுக் கட்டிகளின் வளர்ச்சி இருக்கும். இந்த அறுவை சிகிச்சை ஏறக்குறைய ஐந்து மணி நேரங்களுக்கு நீடித்தது. இரண்டு மகள்களுக்கு தாயான அப்பெண் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது அடிவயிற்றுப் பகுதியில் ஒரு சிறிய வீக்கம் உருவாகியிருப்பதை கவனித்துள்ளார்.
இந்த தசைத்திரளானது படிப்படியாக வளர்ச்சியடைந்து வயிற்றுப் பகுதியில் பிறருக்கு தெரியக்கூடிய அளவிற்கு பெரிய புடைப்பாக மாறியது. அவரது கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது தனது குழந்தைகளை ஆதரவற்றவர்களாக ஆக்கிவிடும் என்ற அச்சமே இதற்கு காரணமாகும். எனினும், சமீப வாரங்களில் இந்த தசைத்திரளானது மிகப்பெரிதாக வளர்ச்சியடைந்ததால் சுவாசிப்பதே அதிக சிரமமானதாக இருந்துள்ளது. பெரும் சிரமம் இல்லாமல் அமரவோ அல்லது படுக்கவோ இயலாத நிலை ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சையை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த திசுத்திரள் வளர்ச்சியானது, இதயம் மற்றும் நுரையீரல்கள் உட்பட பல உள்ளார்ந்த உறுப்புகளின் அமைவிடத்தையும், இயக்கத்தையும் பாதிக்கும் சாத்தியத்தைக் கொண்டிருந்ததால், இப்பெண்ணின் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை செயல்முறைகளின் மதிப்பாய்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்களின் குழு ஒருங்கிணைந்து ஈடுபட்டது.
பெண் பாலுறுப்பியல் துறையின் முதுநிலை நிபுணரான டாக்டர் நிர்மலாவின் தலைமையில் அறுவை சிகிச்சை குழுவில் டாக்டர்கள் அரிமாணிக்கம், வினோதா தேவி, செந்தில்குமார் ஆகியோர் அறுவை சிகிச்சை பணியில் ஈடுபட்டனர். மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் முதுநிலை நிபுணரான டாக்டர் நிர்மலா அறுவை சிகிச்சை குறித்து கூறுகையில், ”இந்த பெண் எங்களிடம் சிகிச்சைக்காக வந்தபோது கடுமையான சுவாச சிரமம், மலச்சிக்கல் மற்றும் அமர்வது போன்ற அடிப்படையான இயக்கச் செயல்பாடுகளில் பிரச்சனை உட்பட பல்வேறு மருத்துவச் சிக்கல்களை கொண்டிருந்தார்.
சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் சோதனைகளையும் மற்றும் கர்ப்பப்பை புற்றுக் கட்டி குறிப்பான்களை கண்டறிவதற்கான சோதனைகளையும் நாங்கள் இப்பெண்ணிற்கு மேற்கொண்டோம். புற்றுநோய் குறிப்பான்கள் எதிர்மறையாக இருந்த போதிலும் இந்த திசுத்திரளின் அளவு மற்றும் அதிவேக வளர்ச்சியின் காரணமாக புற்றுநோய் இல்லை என்று எங்களால் ஒதுக்கித்தள்ள இயலவில்லை. இத்தகைய தீவிர வளர்ச்சி என்பது தீங்கற்ற ஒரு கழலைக்கட்டியில் காணப்படுவது வழக்கத்திற்கு மாறானதாகும்.
இதை கருத்தில் கொண்டு, ஸ்டேஜிங் லேபரோடோமி-ஐ மேற்கொண்ட நாங்கள் கர்ப்பப்பை, சினைப்பைகள், இடுப்பு நிணநீர் முடிச்சுகள் மற்றும் உதரமடிப்பு ஆகிய உறுப்புகளோடு சேர்த்து நார்த்திசு திரளையும் அகற்றினோம். அதிர்ஷ்டவசமாக, செய்யப்பட்ட திசு ஆய்வு முடிவுகள் இந்த வளர்ச்சியானது, புற்றுநோய் சாராத ஒரு மிகப்பெரிய நார்த்திசு திரள் என்பதை உறுதி செய்தன” என்று கூறினார்.