கனடாவின் புதிய அமைச்சரவையில் பொதுபாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி பதவியேற்றுள்ளார்.
அண்மையில் கனடாவில் இடம்பெற்ற பொதுதேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றிபெற்ற நிலையில் புதிய அமைச்சரவை நியமனங்கள் செவ்வாய் கிழமை வழங்கப்பட்டன.
இந்நிலையில் பொதுபாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட ஹரி ஆனந்தசங்கரி முன்னதாக பல அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.
இலங்கைத் தமிழரான இவர் 2015 ஒக்டோபர் 19 இல் நடைபெற்ற கனேடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக நாடாளுமன்றம் சென்றார்.
கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள்சேவை நிலையமொன்றை அவர் ஆரம்பித்துள்ளார்.
கனடாவில் வாழ்கின்ற தமிழ் இளைஞர்களிடம் காணப்படும் முரண்பாடுகளைதீர்ப்பதற்காக முன்னின்று செயற்படுபவராக ஹரி ஆனந்தசங்கரி அந்தகாலங்களில் திகழ்ந்துள்ளார்.
மேலும், கனேடிய தமிழ்க் காங்கிரஸ் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
''பொது பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன், பணிவுடன் உணர்கிறேன். டேவிட் மெக்கின்டியின் நல்ல பணிகளைக் கட்டியெழுப்ப நான் எதிர்நோக்குகிறேன்.
மேலும் நமது சமூகங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதன் மூலமும், வெறுப்பை எதிர்த்துப் போராடுவதன் மூலமும், நமது பாதுகாப்பு நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலமும் கனடியர்களுக்கு சேவை செய்ய நான் உறுதிபூண்டுள்ளேன்.'' என ஹரி ஆனந்த சங்கரி தனது பதவியேற்பின்போது தெரிவித்துள்ளார்.