அரசாங்கம் பொதுத் தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்குகளில் பெருந்தொகையை இழந்திருக்கிறது. சரியென்றால் இப்போதாவது அரசாங்கம் பதவி விலக வேண்டும். எனவே இப்போது பாராளுமன்றத் தேர்தலை நடத்திக் காண்பிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள சவால் விடுத்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொய்கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களை வீடுகளுக்கு அனுப்புவதே எமது இலக்காகும். ஐக்கிய தேசிய கட்சியின் எழுச்சி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
நாம் அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம். அதன் பின்னரே தீர்மானமொன்று எடுக்கப்படும்.
அதனை விடுத்து அரசாங்கம் கூறுவதை செய்வதற்கு நாம் தயாராக இல்லை.
ஐக்கிய மக்கள் சக்தி இதுவரை எம்மிடம் உத்தியோகபூர்வமாக ஆதரவைக் கோரவில்லை. அவர்கள் சபைகளை நிறுவுவதற்கு வாழ்த்துகின்றோம்.
கடந்த ஆண்டு ஆகஸ்டிலிருந்து ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி இணைவுக்காக நான் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றேன்.
எனவே அவர்கள் சபைகளை நிறுவுவதற்கு எமது ஆதரவு வேண்டுமெனில் அவர்களாகவே கோரிக்கை விடுக்க வேண்டும். அவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டால் அது குறித்து ஆராயப்படும். ஐக்கிய மக்கள் சக்திக்கு மாத்திரம் சிறப்பு முன்னுரிமையளிக்கப்பட மாட்டாது என்றார்.