இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்ததன் தொடர்ச்சியாக, நேற்று இரவும் பாகிஸ்தானின் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் இந்திய பாதுகாப்புப் படை வெற்றிகரமாக வீழ்த்தியுள்ளது.
ஜம்மு விமான நிலையம், பஞ்சாபின் பதன்கோட் விமான நிலையம், ராஜஸ்தானின் நல், பலோடி, உத்தர்லை ஆகிய 3 இடங்களில் உள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்கள் நேற்று இரவு திடீர் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இந்திய விமானப் படை அனைத்து ட்ரோன்களையும் நடுவானில் சுட்டு வீழ்த்தியது.
ஜம்மு எல்லை பகுதியில் நேற்று இரவு அத்துமீறி பறந்த பாகிஸ்தான் விமானப் படையின் எப்-16 ரக போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இதேபோல பாகிஸ்தான் விமானப் படையின் எப்.ஜே-17 ரகத்தை சேர்ந்த 2 போர் விமானங்களையும் இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. முன்னெச்சரிக்கையாக ஜம்மு மற்றும் பஞ்சாப், ராஜஸ்தான் எல்லை பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் அப்பகுதிகள் இருளில் மூழ்கின.
ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களை ஒட்டி அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே உள்ள எல்லையோர இந்திய பகுதிகளை குறிவைத்து நேற்று இரவு பாகிஸ்தான் ஏவிய 8 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இந்திய இராணுவம் இடைமறித்து வீழ்த்தியதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே பாகிஸ்தானின் 50 ட்ரோன்களை இந்திய இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது .
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில்,
''ஜம்மு, பதன்கோட், உதம்பூரில் உள்ள இராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் முயற்சியை நடத்தியது. எல்லைப் பகுதியில் இருந்து இந்த முயற்சி நடந்தது. அந்த முயற்சி, நிலையான செயல்பாட்டு நடைமுறைக்கு ஏற்ப முறியடிக்கப்பட்டது. இதில் உயிரிழப்புகளோ அல்லது பொருள் சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இந்தியா தனது இறையாண்மையைப் பாதுகாக்கவும், அதன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தயார் நிலையில் உள்ளது.'' என்று தெரிவித்தது.