நுவரெலியா - கண்டி பிரதான வீதியின் கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் இன்று (11) காலை இடம்பெற்ற பேருந்து விபத்து, தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பில், ஜனாதிபதி இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டில் தினமும் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் குறித்து, அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.
இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கான நிரந்தர திட்டத்தை வகுப்பதற்கு அரசாங்கம் தற்போது மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
தற்போதுள்ள சட்டங்களை செயல்படுத்துவதன் மூலமும், சாரதிகளின் மனப்பான்மையை மேம்படுத்துவதன் மூலமும் இவ்வாறான விபத்துகளைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்று தாம் நம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இன்று காலை இடம்பெற்ற இந்த கொடூரமான வீதி விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேவையான அனைத்து எதிர்கால நடவடிக்கைகளை எடுக்க, பாதுகாப்புப் படையினருக்கும் சுகாதாரத் துறைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.