மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட செட்டிபாளையம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று(10) இடம்பெற்றுள்ளதுடன், லவான் குடி பக்கம் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த கார் ஒன்று, செட்டிபாளையம் பிரதான வீதியில் வைத்து துவிச்சக்கர வண்டியுடன் மோதியே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணை
இந்த விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த 14 வயதான இரு சிறுவர்கள் காயமடைந்ததுடன் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், சிறுவர்கள் இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் காரின் முன் பகுதியும் துவிச்சக்கர வண்டியும் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.