உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்காக 65,000 இற்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
வாக்கெடுப்பு நிலையங்கள், வாக்கெண்ணல் நிலையங்கள் மற்றும் வாக்கெடுப்பு நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மொத்தமாக 73,000 இற்கும் அதிகமான பொலிஸார் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாருக்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 2,337 பேரும் பாதுகாப்புப் பணிகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவசர தேவைகளின்போது, ஒத்துழைப்பை வழங்குவதற்காக முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 9,906 பேர் பாதுகாப்பு ஒத்துழைப்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தலுக்குப் பின்னர் ஏதேனும் வன்முறைகள் ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்வதற்காக கலகமடக்கும் பொலிஸாரும் தயார் நிலையில் உள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.