கோவிட் காலத்தில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் சாக்கில் கொழும்பு மாநகர சபையில் 459 மில்லியன் ரூபா மோசடியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த கோவிட் காலத்தில் கொழும்பு மாநகரின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்த காரணத்தினால் கொழும்பு மாநகர எல்லைக்குள் குடியிருப்பவர்களுக்கு மாநகர சபையின் நிதியைக் கொண்டு சுமார் 140 மில்லியன் ரூபா செலவில் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன.
அதன் பின்னரும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக என்று தெரிவிக்கப்பட்டு 3ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான 1 இலட்சத்தி 34 ஆயிரம் வவுச்சர்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 459 மில்லியன் ரூபாவாகும்.
குறித்த வவுச்சர்களை கிராம அலுவலர்கள் மூலம் பொருத்தமானவர்களுக்கு விநியோகிப்பதற்குப் பதில் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர்கள் தங்களுக்குத் தேவையானவர்களுக்கு டோக்கன் வழங்கி, முறைகேடான வகையில் விநியோகித்துள்ளனர்.
தற்போது கணக்காய்வாளர் நாயகத்தின் தணிக்கை அறிக்கையில் இந்த விபரங்கள் வெளிப்பட்டுள்ள நிலையில், குறித்த தொகையை நகர்மன்ற உறுப்பினர்களிடம் இருந்து அறவிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.