இந்திய இராணுவம் மேற்கொண்ட ‘ஒபரேஷன் சிந்தூர்’ 25 நிமிடங்களில் நடத்தி முடிக்கப்பட்டதாகவும், 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட 24 ஏவுகணைத் தாக்குதல்களில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். லஷ்கர்-இ-தொய்பா நடத்திய இந்த தாக்குதலின் பின்னணியை உறுதிப்படுத்திய இந்திய அரசு, பாகிஸ்தானில் இயங்கி வரும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து தாக்க இராணுவத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, ‘ஒபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய இராணுவம் தனது தாக்குதல்களை திட்டமிட்டது. இந்தத் தாக்குதல் நேற்று அதிகாலை 1.05 மணிக்குத் தொடங்கி 1.30 மணிக்குள் நிறைவடைந்தது. 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இவற்றின் மீது தாக்குதல் நடத்த 24 ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதில், 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதோடு, 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 60 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இராணுவத்தின் 24 ஏவுகணைகளும் துல்லிய தாக்குதல்களை நடத்தியதாகவும், பயங்கரவாத கட்டமைப்பின் பகுதிகளாக இருந்த கட்டளை மையங்கள், பயிற்சி முகாம்கள், ஆயுதக் கிடங்குகள், நிலை வசதிகள் ஆகியவை அழிக்கப்பட்டதை உளவுத் துறை உறுதிப்படுத்தியதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் இராணுவ நடவடிக்கை விரிவானதாக இருந்தபோதிலும், பாகிஸ்தானின் எந்த இராணுவ கட்டமைப்புகளும் குறிவைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணைகள் தரையிலிருந்தும், வான்வழியாகவும் ஏவப்பட்டன. கண்காணிப்பு ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நேரலையாக கண்காணிக்கப்பட்டன. இதன்மூலம், குறைந்தபட்ச பொதுமக்கள் உயிரிழப்புகளுடன் இலக்குகள் குறிவைக்கப்பட்டன. பயங்கரவாத முகாம்களை அழித்தொழிக்க பல போர்முனைகள் ஒரே நேரத்தில் தாக்கின. ஒபரேஷன் சித்தூரில் தாக்குதல் நடத்திய இலக்குகள் குறித்து மத்திய அரசு பகிர்ந்துள்ள தகவலின்படி 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.