சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 11 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், மன அழுத்தம் காரணமாக உயிர் மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படும் மாணவனின் மரணம் தொடர்பில் கைதான, அந்தப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மூன்றாம் வருட மாணவர்கள் நால்வர் உட்பட, 11 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மேலும் 4 மாணவர்கள் இன்று (05) சமனலவெவ காவல்துறையில் சரணடைந்துள்ளனர்.
சரணடைந்த 4 சந்தேகநபர்களான மாணவர்களும், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, மாணவனின் மரணம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட மாணவர்கள் நால்வரையும், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.