பிரித்தானியாவில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர் தப்பியோடிய நிலையில் அவரை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் தேடி வருகின்றனர்.
சிறுவர் துஷ்பிரயோக வழக்கில் சிக்கி, தண்டனை அறிவிக்கப்பட்ட 55 வயதான நலிகா ரணசிங்க என்பவரே சிறை தண்டனையிலிருந்து தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது குறித்த இலங்கையருக்கு 6 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குற்றவாளியான இலங்கையர், அன்றைய நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காமல் தப்பிச் சென்றுள்ளார்.
நலிகா ரணசிங்க தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு, அவரின் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
சிறுமி ஒருவருடன் ரணசிங்க 1200 குறுந்தகவல்களை பரிமாற்றம் செய்துள்ளார். 2023 பிப்ரவரி மாதம் நடந்த இச்சம்பவத்தில், சிறுவர் ஆர்வலர் குழு ஒன்று திட்டமிட்டு நடத்திய நடவடிக்கையா என்பது உறுதி செய்யப்படவில்லை.
இணையத்தில் அறிமுகமான சிறுமி தமக்கு 14 வயது என குறிப்பிட்டும், அவருடன் தகாத முறையில் உரையாடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். இவ்வாறான நிலையில் அவரை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.