தலைநகர் டில்லியின் வடகிழக்கு பகுதியில் இன்று அதிகாலை நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய சுமார் 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. 10 பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
டில்லியின் முஸ்தபாபாத் பகுதியில் இந்தச் சம்பவம் அதிகாலை 3 மணி அளவில் நடந்துள்ளது. இதில் மீட்கப்பட்டவர்கள் ஜி.டி.பி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் அந்த இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் விரைந்து சென்று, மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்த விசாரணை தொடங்கி உள்ளது.
கட்டடம் இடிந்து விழுந்த போது பெரிய அளவில் தூசு ஏற்பட்டுள்ளது. இது அந்த கட்டடத்துக்கு அருகில் இருந்த கட்டடங்களில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளில் பதிவாகி உள்ளது. கடந்த வாரம் டில்லியில் கட்டடம் மற்றும் சுவர் இடிந்து விழுந்த இரு வேறு சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்தபாபாத் கட்டட இடிபாடுகளில் சுமார் 10 பேர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.