இந்திய மும்பை விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில் பயணி ஒருவர் அதிகளவில் போதைப்பொருள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் கடந்த 9 ஆம் திகதி வெளிநாட்டில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது, உகாண்டா நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் பதற்றத்துடன் காணப்பட்டார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரது உடைமைகளில் சோதனை நடத்தினர்.
இதில் எந்த பொருளும் சிக்காததால் அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதில், அவர் போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்ததாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் அவரை விமான நிலைய பொலிஸாரிடம் ஓப்படைத்தனர்.
பொலிஸார் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வைத்திய பரிசோதனையில் அவர் போதைப்பொருளை Capsule வடிவில் விழுங்கி கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வைத்தியர்கள் கடந்த 13 ஆம் திகதி இனிமா கொடுத்து அவரது வயிற்றில் இருந்த 785 கிராம் கோகைன் என்ற போதைப்பொருளை வெளியே எடுத்து பொலிஸார் அதனை பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு சர்வதேச ரீதியில் 7 கோடியே 85 லட்சம் ரூபாவாகும். இது குறித்து உகாண்டா நாட்டை சேர்ந்த பயணியை கைது செய்து, அவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.