வெளிநாட்டிலிருந்து சுற்றுலா பயணியாக வந்த பெண்ணொருவரிடம் தனியார் பேருந்தில் நபர் ஒருவர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த வெளிநாட்டு பெண், கொழும்பில் தனியார் பேருந்து ஒன்றில் பயணிக்கும் போது சில்லறை வியாபாரி ஒருவர் அருகில் அமர்ந்து அப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.
இதன்போது, குறித்த பெண் அங்கிருந்தவர்களிடம் தெரிவித்ததையடுத்து பேருந்து நடத்துனர் உள்ளிட்டவர்கள் அந்த நபரை வேறு இருக்கையில் அமர செய்துள்ளனர்.
பின்னர், அந்த பெண் பேருந்தில் இருந்து இறங்கி கோல்ஃபேஸ் கடற்கரைக்கு சென்றுள்ள நிலையில் அந்த நபர் அங்கும் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
இதன்போது மிகவும் அச்சமடைந்த பெண், அங்கிருந்தவர்களிடம் கூறிய நிலையில் அவர்கள் அந்த நபரை வெளியேற்றியுள்ளனர்.
இச்சம்பவங்களை குறித்த வெளிநாட்டு பெண், காணொளியாக அவரது சமூக ஊடக பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். குறித்த காணொளியில், இலங்கை பேருந்தில் கிடைத்த மிக மோசமான அனுபவம் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இனி மிக கவனமாக இருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுற்றுலா துறையில் மிக முக்கிய இடம் வகிக்கும் இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகுவது சமூக பார்வையில் கரும்புள்ளிகளாக மாறுகின்றமை மிக கவலைக்குரிய விடயமாகும்.