குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு 11 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குருநாகல் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
வாயு நிரப்புவதற்காக வந்த லொறி ஒன்றுக்கு வாயு நிரப்பும் போது, 6,000 லீற்றர் கொள்ளளவு கொண்ட இரண்டு வாயு தொட்டிகளில் ஒன்று வெடித்ததால் இந்தத் தீ ஏற்பட்டுள்ளது. வெடிக்காத மற்றொரு 6,000 லீற்றர் வாயு தொட்டியை மாநகர சபை ஊழியர்கள் மிகுந்த முயற்சியுடன் மூடியதால், ஏற்படவிருந்த பாரிய சேதம் ஓரளவு தவிர்க்கப்பட்டது என்று கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாக குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.