நானுஓயா கிளாஸ்கோ தோட்டத்தில் நேற்று (26) இடம்பெற்ற ‘பொன்னர் சங்கர்’ நாடகத்தின் இறுதி நிகழ்வான கம்ப மரம் ஏறும் நிகழ்வு இன்று (27) காலை இடம்பெற்றது. இந்த நிலையில் அந்தக் கம்ப மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிழந்துள்ளார் என்று நானுஓயா பொலிஸார் தெராவித்தனர்.
நானுஓயா கிளாஸ்கோ தோட்டத்தைச் சேர்ந்த எம்.சதாசிவம் (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நானுஓயா கிளாஸ்கோ தோட்டத்தில் நேற்று (26) இரவு ஆரம்பிக்கப்பட்ட ‘பொன்னர் சங்கர்’ கூத்து இன்று காலை முடிவுறும் நிலையில் திறந்தவெளியில் தயார் செய்யப்பட்டிருந்த 60 அடி உயரமான மரக்கட்டையில் இணைக்கப்பட்ட மர ஏணியில் (கம்ப மரம்) ஏறிய நபர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நானுஓயா கிளாஸ்கோ தோட்டத்தில் ஆண்டுதோறும் இந்தப் பொன்னர் சங்கர் கூத்து நடத்தப்படுவது வழமை. இரவு முழுவதும் நடந்த நாடகத்தின் பின்னர் காலையில் பொது வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் கம்ப மரத்தில் பெரிய காந்தி எனும் கதாபாத்திரம் அதில் ஏறி சில நிமிடங்கள் தவம் செய்து பூஜை செய்ததன் பின்னர் அதிலிருந்து இறங்குவார். அதுபோலவே குறித்த நபர் மரத்தில் ஏறியபோது மரத்திலிருந்து தவறி கீழே வீழ்ந்து உயிரிழந்தள்ளார்.
கம்ப மரத்திலிருந்து விழுந்த நபர் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.