ரவுடித்தனப் பாணியில் சந்திரசேகரின் பேச்சு: சுமந்திரன் சீற்றம்

அமைச்சர் சந்திரசேகரின் ரவுடித்தனமான பேச்சு, காடைத் தனமான முறையில் அரசாங்கம் செயல்பட ஆரம்பித்திருக்கின்றது என்பதனையே காட்டுகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடாத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியவை வருமாறு:-

"இந்தப் புத்தாண்டிலே எமது மக்கள் புதிதான அணுகுமுறையில் செயற்பட  வேண்டும், பயணிக்க வேண்டும் என்று நாங்கள் விநயமாகக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலிலே - அதிலும் விசேடமாகத் தமிழ் மக்களின் கலாசார, அரசியல், தேசிய உறைவிடமாகக் கருதப்படுகின்ற யாழ்ப்பாணத்திலே - தேசிய மக்கள் சக்திக்கு ஆணை கொடுத்திருக்கின்றார்கள் என்று சொல்கின்றார்கள்.

ஜனாதிபதித் தேர்தலின்போது வாக்களித்தவர்ளை விடவும் 10 சத வீதமானவர்கள் குறைவாகவே நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தனர். இந்தச் சூழ்நிலையைச் சாதமாகப் பயன்படுத்தி

யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் ஆதரவு கூட தமிழ்க் கட்சிகளுக்குக் கிடையாது, அது தேசிய மக்கள் சக்திக்கே கொடுக்கப்பட்டுள்ளது எனக் கூற அரசாங்கம் தலைப்படுகின்றது. இது ஒரு தவறான விம்பம்.

போட்டியிட்ட கட்சிகளில் அவர்களிற்கு அதிகப்படியான வாக்குகள் கிடைத்ததன் அடிப்படையில் அப்படியாகச் சொல்லுகின்றார்கள். அதை அடுத்து வருகின்ற முதலாவது தேர்தல் இது.

நாடாளுமன்றத் தேர்தலின்போது யாழ்ப்பாணத்தில் 25 சதவீதமான வாக்கை தேசிய மக்கள் சக்தி பெற்றது. அதற்கு அடுத்தபடியாக தமிழரசுக் கட்சி 20 வீதத்தை அண்மித்த வாக்கினைப் பெற்றது.

மே 6 இல் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலிலே வரும் முடிவு அரசாங்கம் சொல்லுகின்ற கூற்று உண்மையா, இல்லையா என்பதை சோதித்துப் பார்க்கின்ற தருணம். ஆகையினாலே நாம் நமது மக்களிடத்தில் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றோம். தேசிய மக்கள் சக்திக்கோ, தென்னிலங்கை கட்சிக்கோ ஆணை கொடுத்து விடவில்லை என்பதைக் காட்ட வேண்டுகின்றோம். நாடாளுமன்றத் தேர்தலில் கூடிய வாக்குகளைப் பெற்றதனால் அவ்வாறு காண்பிக்கப்படுகின்றது. அதனால் இந்தத் தடவை அப்படியாக வாக்களிக்காது தமிழ்க் கட்சிகளிற்கு வாக்களிக்குமாறு கோருகின்றோம்.

தமிழ்க் கட்சிகள் என்கின்றபோதும் பிரிந்து, பிரிந்து பலருக்கும் வாக்களிக்கும்போது நாடாளுமன்றத் தேர்தலில் இடம்பெற்றதைப் போன்றேது இருக்கும். அதனால் ஒரு தமிழ்க் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். இன்று நாட்டிலே சமஷ்டி ஆட்சி வேண்டும் என்பதை 75 ஆண்டுகாலமாக அடிநாதமாகக் கொண்டது தமிழரசுக் கட்சிதான். எனவே, தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்து அந்த ஆணையை வழங்க வேண்டும்.


தமிழர் தேசம் முழுமையாக நாடாளுமன்ற உறுப்பினரைக்கொண்டு வியாபித்துள்ள ஒரே தமிழ்க் கட்சி தமிழரசுக் கட்சி மட்டும்தான். பிரிந்து ஏனைய உதிரிக் கட்சிகளிற்கும் வாக்களித்தால் அரசாங்கத்திற்கு ஆணை கிடைத்திருக்கின்றது என்பதைப் போன்ற தோற்றம் ஏற்படும்.

வடக்கு, கிழக்கில் தமிழரசுக் கட்சி 59 சபைகளில் போட்டியிடுகின்றது. அனைத்திலும் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

விசேடமாக இந்தத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சுத்தமான நாடு என - அதாவது கிளீன் ஸ்ரீலங்கா என - ஆட்சிக்கு வந்தார்கள். வந்தவுடன் அந்தக் கருப்பொருளில் ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்தனர். எல்லாவற்றையும் சுத்தமாக்குவது, சரியான முறையில் நடப்பது என்றெல்லாம் சொன்னார்கள. ஆனால் அதிகாரத்திற்கு வந்தவுடன் முதல் தேர்தலின் போதே இதற்கு முன்னர் இருந்த ஆட்சியாளர்கள் செய்யாத அளவு தேர்தல் விதிமுறை மீறல்களை அவர்கள் நேரடியாகவே செய்கின்றார்கள்.

அமைச்சர் சந்திரசேகரின் ஓர் உரையைப் பார்த்தேன். அதல் அவர் எமது கூட்டத்தை நிறுத்தப் பார்த்தார்கள் என்கின்றார். மாற்றுக் கட்சியினரை, முன்னாள் தவிசாளரை 'நரி' என்ற சொல் பிரயோகம் செய்தார். அதன்போது 'அவர்களிற்கு விளையாடத் தெரிந்தால் எங்களிற்கும் விளையாடத் தெரியும்' - என்று ஒரு ரவுடிப் பாணியில் சவால் விடுகின்றார். அரசிடம் நான் நேரடியாக கேட்க விரும்புவது - இதுதானா உங்கள் கிளீன் சிறிலங்கா...?

நேரடியாகவே தேர்தல் விதிகளை மீறிக்கொண்டு, மீறுவது மட்டுமன்றி 'ஓம், நாம் மீறுவோம். எங்களிற்கு அப்படி விளையாடத் தெரியும், நீங்கள் முடிந்தால் செய்து காட்டுங்கள்!' என்று சவால் விடுகின்ற அளவிற்கு காடைத்தனமான முறையில் அரசாங்கம் செயற்பட ஆரம்பித்திருக்கின்றது. இது வாக்காளர்களிற்கும் ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வர வேண்டும். ஊழலற்ற ஆட்சி, சீரான ஆட்சி, சரியான முறையிலே நாங்கள் நாட்டைக் கொண்டு செல்லுவோம், சட்டத்தை மதிப்போம், சட்டத்தின் ஆட்சிதான் நாட்டில் இருக்கும் என்றெல்லாம் சொல்லுபவர்கள், முதலாவது சந்தர்ப்பத்திலேயே, தங்களுடைய தேர்தலுக்காக வெளிப்படையாகச் சட்டத்தை மீறுகின்ற செயலிலே இறங்கியிருக்கின்றமையை மக்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்." - என்றார்.

கருத்துரையிடுக

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள் .

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.