கனடாவில் லாபு லாபு தின தெரு விழாவில் நடந்த கோர விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவின் வான்கூவர் நகரில் இரவு 8 மணிக்கு சன்செட் ஆன் ஃப்ரேசர் பகுதியில் நடைபெற்ற லாபு லாபு தின தெரு விழாவில் எதிர்பாராத விதமாக ஒரு கார் கூட்டத்திற்குள் புகுந்ததில் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வான்கூவர் கார் விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, கறுப்பு நிற எஸ்.யூ.வி. வாகனம் ஒன்று அதிவேகமாக திருவிழா பகுதிக்குள் புகுந்து, அங்கிருந்த ஏராளமான மக்களை இடித்துத் தள்ளியுள்ளது.
மேலும், அந்த வாகனத்தை ஓட்டியவர் ஒரு இளம் ஆசிய இளைஞராகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலவும் காணப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் சமூகத்தினர் வெகு விமரிசையாக கொண்டாடும் லாபு லாபு பண்டிகையின் போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
E. 41st அவென்யூ மற்றும் ஃப்ரேசர் வீதி சந்திப்பில் இந்த வான்கூவர் தெரு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது வாகன ஓட்டுநர் ஒருவர் கட்டுப்பாடு இழந்து கூட்டத்திற்குள் வேகமாக நுழைந்துள்ளார் என்று நேரில் கண்ட சாட்சிகள் தகவல் தெரிவிக்கின்றன.
ஆரம்பகட்ட தகவல்களின்படி, இந்த எஸ்.யூ.வி. மோதியதில் (SUV crash) பலர் உயிரிழந்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என கூறப்படுகிறது.
வான்கூவர் பொலிஸ் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
இந்த வான்கூவர் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் காயமடைந்தவர்களின் நிலை குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பந்தப்பட்ட ஓட்டுநர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த துயரச் சம்பவத்திற்கு கனடா பிரதமர் மார்க் கார்னி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.