அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பை கொலை செய்ய திட்டமிட்ட 17 வயது மாணவனை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் நிகிட கேசப் என்னும் 17 வயது மாணவன், தனது பெற்றோரை கொலை செய்து, சடலங்களை வீட்டில் போட்டு விட்டு, எதுவுமே நடக்காதது போல 3 நாள்களாக பாடசாலைக்கு சென்று வந்துள்ளார்.
இதையடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக வங்கியில் இருந்த பணத்தை தன்வசமாக்கியுள்ளதுடன் அப்பாவின் காரை எடுத்துக் கொண்டு, 800 மைல் தொலைவில் உள்ள கான்சாஸ் மாநிலம் சென்றுள்ளார்.
இந்நிலையில், அவனது தந்தையின் தாயார் (பாட்டி) தனது மகன் தன்னை 7 நாள்களாக தொடர்புகொள்ளவில்லை என பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்றவேளை, 2 சடலங்கள் அழுகிய நிலையில் இருந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், உயிரிழந்தவரின் மகன் மற்றும் காரை காணாததையடுத்து மகன் மேல் சந்தேகம் கொண்ட பொலிஸார் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதனையடுத்து, சந்தேக நபர் கான்சஸ் மாநிலத்தில் ஒரு வீதியில் செல்லும் வேளை, தடைசெய்யப்பட்ட ஒரு வீதியில் சென்றதால் பொலிஸார் மறித்து விசாரித்த போது அவர் சிக்கியுள்ளார்.
மேலும், சந்தேகநபரது வீட்டில் காணப்பட்ட சில தகவல் அடங்கிய புத்தகத்தில், அமெரிக்க ஜனாதிபதியை எப்படி கொலை செய்ய வேண்டும் என்ற குறிப்புகளை எழுதி வைத்திருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் ஒரு சிறிய குழுவோடு தொடர்பில் இருந்துள்ளார் எனவும் அந்தக் குழுவில் இருக்கும் ஏனைய நபர்களும் ஜனாதிபதி ட்ரம்பை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் என்பதுவும் வெளிவந்துள்ளது.
இதனால் பெரும் அதிச்சியடைந்த பொலிஸார் பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றில் இறங்கிய நிலையில், தற்போது டொனால்ட் ட்ரம்புக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.