நாயாற்று கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதி சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இன்னுமொரு யுவதி இன்று (31.03.2025) மாலை உயிரிழந்துள்ளார்.
உடையார்கட்டு பகுதியில் தையல் கற்கும் யுவதிகளும் ,தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள் கப்ரக வாகனத்தில் நாயாற்று கடற்பகுதிக்கு வந்துள்ளனர். குறித்த பெண்கள் நாயாற்று கடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென மூன்று பெண்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். நீரில் அடித்துச்செல்லப்பட்ட மூவரில் இரு பெண்கள் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 20 வயதுடைய இன்னுமொரு யுவதியும் சிகிச்சை பலனின்றி முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் 20 வயதுடைய வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த சிவபாலராஜா பிரியந்தினி எனும் யுவதியே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்கள் சென்ற வாகனத்தையும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் கொக்குளாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாயாற்று கடற்கரையில் நீராட சென்ற இருவர் மரணமடைந்துள்ளனர். ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.