கிளிநொச்சியில் இருவர் உயிரிழப்பு : எலிக்காய்ச்சலாக இருக்கலாம் - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு
கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோய்க்காரணி லெப்டோஸ்பைறா பக்ரீறியாவால் இருவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியின் முழங்காவில் மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாகவும் அதற்கு எலிக்காய்ச்சல் நோய்க்காரணி காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
காய்ச்சல் ஏற்பட்டால் மற்றும் தசைநோ, கண்சிவத்தல், சுவாசப்பிரச்சனைகள் போன்றவை காணப்பட்டாலும் உடனடியாக வைத்திய பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இதைவிட தற்போதைய பனியுடனான காலநிலையில் சளி அதிகரித்து நிமோனியா போன்ற காய்ச்சலும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அதனைவிட மழையுடனான காலநிலையைத் தொடர்ந்து டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதிலும் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்தார்.