வடக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகள் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட மாகாண வேலையில்லாப் பட்டதாரிகளால் அனைவருக்கும் சமமான வேலை வாய்பை வழங்கக்கோரி கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபியிலிருந்து ஆரம்பமான கவனயீர்ப்புப் பேரணி, தபால் நிலைய வீதியூடாக யாழ். பேருந்து நிலையத்தை சென்றடைந்தது.
இதன்போது கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் பட்டதாரிகள் பட்டமளிப்பின் போது அணியும் உடையை அணிந்தவாறும் சில பட்டதாரிகள் கூலித்தொழிலில் ஈடுபடுவதை சித்தரிக்கும் வகையிலும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் துண்டு பிரசுர விநியோகத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் அதனைத் தொடர்ந்து ஆளுநர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். .தொடர்ந்து பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆளுநர் அலுவலகத்தில் வட மாகாண ஆளுநரைச் சந்தித்தனர்.