முல்லைத்தீவில் பொலிசார் வீடு புகுந்து அச்சுறுத்தல் தாயும் பிள்ளையும் வைத்தியசாலையில் அனுமதி!!
(வன்னி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் முறைப்பாடு!)
முல்லைத்தீவில் பொலிசார் வீடு புகுந்து குடும்பத்தலைவனை அச்சுறுத்திய நிலையில் அதிர்ச்சியடைந்த மனைவி மற்றும் அவரது பெண்பிள்ளை ஆகிய இருவரும் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் ஆனாது முல்லைத்தீவு உடப்புக்குளம் பகுதியில் நடைபெற்றுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது!
குடும்பத்தகராறை காரணம் காட்டி பாலன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் மீது நேற்று 17-01-2025 வழக்கு பதிவு செய்த முல்லைத்தீவு பொலிசார், குறித்த நபரை காரணங்கள் ஏதும் சொல்லாமல் கைது செய்து முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். நீதிமன்றம் பிணை வழங்கியிருந்த போதும், பாலன் தனது வீட்டில் குடும்பத்தாருடன் இருக்கும் போது இரவு நேரம் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த பொலிசார் அவரை அச்சுறுத்திய நிலையில் இதனை நேரில் பார்த்த பாலனின் மகள் அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளார். இச்சம்பவத்தின் தொடராக பாலனின் மனைவியின் உடல் ரீதியான அசாதாரண நிலையை தொடர்ந்து இருவரும் அம்புலன்ஸ் வண்டிமூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாலன் என்பவர்..
எனது அக்காவுக்கும் எனக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக எனது சகோதரி பிரான்ஸ் நாட்டிலிருந்து கொடுத்த முறைப்டபாட்டிற்கு அமைவாக முல்லைத்தீவு பொலிசார் என்மீது பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக நானும் எனது குடும்பத்தினரும் மன ரீதியான பாதிப்புக்குள்ளாகியுள்ளோம். என்னை கைது செய்வதற்கு மூன்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் வந்திறங்கிய பொலிசார் வீட்டை சுற்றிவளைத்து பாதுகாப்புக்கு நின்று என்னை கைது செய்து அழைத்து சென்றனர். என்னை ஒரு தீவிரவாதிபோல் நடத்தினர், என்மீது என்ன குற்றம்சாட்டப்பட்டது என்பதைக்கூட பொலிசார் அறிவிக்காமல் கைது செய்திருந்தனர்.அத்துடன் எனது மகனை( 12 வயது) விசாரணைக்காக எனக்கு தெரியாமலே பொலிஸ்நிலையம் அழைத்து வந்து எனக்கு எதிராக சாட்சியம் அளிக்க வைத்துள்ளனர் ஏன குறிப்பிட்டார்.
எங்கள் ஊரில் குற்றம் நடக்கும் நேரங்களில் தொலைபேசியில் முறைப்பாடளித்து பல மணிநேரம் அல்லது ஒரு நாள் கடந்து சம்பவ இடத்திற்கு வரும் பொலிசார் எனது குடும்பபிரச்சினையில் எனது சகோதரியின் முறைப்பாட்டிற்கு என்மீது இவ்வாறு ஒரு துரிதநடவடிக்கை மேற்கொண்டது ஆச்சரியமளிக்கின்றது என குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பொறுப்பற்ற இவ்நடவடிக்கை குறித்து வன்னி பொலிஸ் மா அதிபர் காரியலயத்திற்கு தொலைபேசியூடாக முறைப்பாடு ஒன்று செய்துள்ளேன் என தெரிவித்தார்.
பாலன் என்பவரின் மகனை 12 வயது விசாரணைக்கு பொலிசார் பெற்றோருக்கு தெரியாமல் அழைத்து சென்றது சரியா?
ஒரு சிறுவனை பொலிஸ் நிலையம் விசாரணைக்கு அழைக்கும் போது சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா?
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிறுவர் நன்னடத்தை மேம்பாட்டு அதிகாரி..
ஒரு சிறுவனை பொலிசார் விசாரணைக்கு அழைக்கும் போது கிராம உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் நன்னடத்தை மேம்பாட்டு அதிகாரிக்கு அறிவித்ததன் பின்னரே விசாரணைக்கு அழைக்க முடியும் என தெரிவித்தார்.