யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியாரும் இணைந்து நெடுந்தூர சேவைகளை ஆரம்பிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயன் தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகிதி முதல் இணைந்த நேர அட்டவணையின் கீழ் நெடுந்தூர சேவைகள் ஆரம்பமாகும் என ஆளுநர் அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் இலங்கை போக்குவரத்துச் சபையும், தனியார் பேருந்து உரிமையாளர்களும் இணைந்து ஒரே இடங்களிலிருந்து சேவைகளை நடத்தி வரும் நிலையில் வட மாகாணத்திலும் அவ்வாறான நிலைமையை ஏற்படுத்துவதற்காக பல தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவை பலனளிக்கவில்லை என்பதை ஆளுநர் இந்தக் கலந்துரையாடலில் சுட்டிக்காடியிருந்தார்.