போலி ஆவணம் தயாரித்து அரச காணியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் வவுனியாவில் அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணம் தயாரித்து 22 மில்லியன் ரூபாய்க்கு குறித்த காணி விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.வவுனியா, பம்பைமடு பகுதியில் உள்ள அரச காணி ஒன்றினை போலி ஆவணங்கள் மூலம் 22 மில்லியன் ரூபாய்க்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின் குறித்த சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.