அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் இதனைத் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், கிளீன் ஸ்ரீலங்கா , கிராமிய வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க இதன்போது உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.கல்வி, எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வடக்கு அபிவிருத்தி ஆகியவற்றில் புதிய திட்டங்களுக்கு உதவி வழங்குவது குறித்து இதன் போது கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதுஉலக வங்கி இலங்கைக்கு வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள கடன் உதவியை உரிய சமயத்தில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக மார்டின் ரேசர் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கல்வித் துறை முன்னேற்றத்தின் மூலம் கிராமிய வறுமையை ஒழிக்க முடியும் என்று குறிப்பிட்டார்.அதற்காக புதிய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்வி சீர்திருத்த முயற்சிகளுக்கும், பொதுப் போக்குவரத்துத் துறையின் முன்னேற்றத்திற்கும் தேவையான உதவிகளை வழங்குமாறு உலக வங்கி பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. 2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டது.