பெண்ணின் உடலமைப்பு குறித்த கருத்து பாலியல் துன்புறுத்தல் குற்றத்தின் கீழ் வரும் என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரளவில் மின்சார சபையின் முன்னாள் ஊழியர் ஒருவர் பணியில் இருந்தபோது சக பெண் ஊழியரிடம் அவரது உடலமைப்பு குறித்து தவறாகப் பேசியுள்ளார்.2013 முதல் அவர் தன்னைத் தவறாகப் பேசி வருவதாகவும் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டில் தவறான முறையில் குறுஞ்செய்திகள், குரல் பதிவுகளை அனுப்பியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்ததைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தன் மீதான வழக்கை இரத்து செய்யக்கோரி பிரதிவாதி தொடர்ந்த வழக்கை கேரள உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. ஒரு பெண்ணின் உடலமைப்பு ‘நன்றாக இருக்கிறது’ என்று கூறினாலும் அதுவும் பாலியல் துன்புறுத்தல் குற்றத்தின் கீழ் வரும் எனவும், குற்றம்சாட்டப்பட்டவர் மீது பாலியல் குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது சரியே,” எனவும் தெரிவித்த நீதிபதி, வழக்கின் இடைக்கால உத்தரவை இரத்து செய்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.