வவுனியாவில் நெளுக்குளம் - நேரியகுளம் வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் நெளுக்குளம் - நேரியகுளம் வீதியூடான போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.
வவுனியா, பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதானால் அதன் 4 வான் கதவுகளும் 2 அடிக்கு மேல் திறக்கப்பட்டுள்ளன. வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருவதால் பாவற்குளத்தின் நீர்மட்டமானது அதன் கொள்ளவான 19.4 அடியை அடைந்துள்ளது. இதனால் அதன் ஒரு வான் கதவுகள் இரண்டரை அடியும், மூன்று வான்கதவுகள் இரண்டு அடியும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன், தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மேலும் வான் கதவுகள் ஊடாக நீர்பாயும் வீதத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பாவற்குளத்தின் நீர் வழிந்தோடும் பகுதிகளில் உள்ள கந்தசாமி நகர், கிறிஸ்தவகுளம், பாவற்குளம் படிவம் 5,6,4,2,1, பீடியாபாமின் வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.