போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து 90 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் ஹமாஸினால் 3 இஸ்ரேல் பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக இந்த பணயக்கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது. பாலஸ்தீனத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவிப் பொருட்கள் அடங்கிய முதலாவது வாகனமும் காஸாவிற்குச் சென்றுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர்நிறுத்தத்திற்கு கடந்த 15 ஆம் திகதி உடன்பாடு எட்டப்பட்டது.
அமெரிக்காவின் அனுசரணையுடன் எகிப்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்துடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து காஸாவுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியது. காஸாவுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் இஸ்ரேலிலன் பாதுகாப்பு அமைச்சரவையில் நடைபெற்ற நீண்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து அனுமதி வழங்குவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.