வடக்கு - கிழக்கு இணைந்த தீர்வே வேண்டும்: ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானம்

 "வடக்கு - கிழக்கு இணைந்த ஒரு மாநிலமாக தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசமைப்பைப் புதிய அரசு உருவாக்க வேண்டும். அத்துடன் மகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தி அதற்கான அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும். இது தொடர்பில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேசுவதற்குத் தீர்மானித்துள்ளோம்."

- இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

வவுனியா, கோவில்குளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை இடம்பெற்றது. இதன் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நடந்து  முடிந்த தேர்தல் தொடர்பாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் இரண்டு தடவைகள்  இணைய வழி ஊடாகப் பேசியுள்ளோம். இன்றைய கூட்டத்தில் வரவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் பேசினோம். அத்துடன் ஜனநாயகத்  தமிழ்த் தேசியக் கூட்டணியைக் கிராம மட்டங்களில் பலப்படுத்தல் தொடர்பாகவும் பல்வேறுபட்ட ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

முக்கியமாக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியாகத் தற்போது அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் போட்டியிடும். அத்துடன் எம்முடன் இணைந்து பயணிக்கக் கூடிய ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடனும் பேசி அவர்களும் இணங்கும் பட்சத்தில் இணைந்து போட்டியிடவுள்ளோம்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியப் பரப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழ்க் கட்சிகளுடன் இது தொடர்பில் பேசுவதாகவும் தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி முதலாவது வாரத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் மாநாட்டை வவுனியாவில் நடத்தத் தீர்மானித்துள்ளோம். அதற்கு முன்னதாக மாவட்ட  நிறைவேற்றுக் குழுக்கள் கூடி என்ன விடயங்கள் பேசப்பட வேண்டும் எனவும் தீர்மானிப்பார்கள். அதற்கான நடவடிக்கைகள் உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புதிய ஓர் அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டி தேவையும் பொறுப்பும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு இருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் என்பது சரியான  முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும என்பதில் நாம் ஆணித்தரமான கருத்துக்களைக்  கொண்டிருக்கின்றோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக்  கொண்டிருக்கக் கூடிய புதிய அரசு வந்திருக்கின்றது.

புதிய அரசு ஒரு மாற்றத்தை உருவாக்கப் போவதாக சொல்லியிருக்கின்றார்கள். நிர்வாகத்தில் மாற்றம், அரசியலில் மாற்றம், ஊழல் இல்லாத நிர்வாகத்தை ஏற்படுத்துவது எனப் பல விடயங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சினையைத்  தீர்க்கக் கூடிய மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பது எம் மக்களது கருத்தாக இருக்கின்றது. அந்த அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் கூட ஒரு மாற்றம் ஏற்படும் என்பதற்காகத்தான் அந்த வாக்குகளும் அளிக்கப்பட்டன என்று நாங்கள் கருதுகின்றோம்.

ஆகவே, தமிழ் மக்கள் மத்தியில் 75 வருடங்களாகத் தேசிய இனப்பிரச்சினை புரையோடிப் போயுள்ள பிரச்சினையாக இருக்கின்றது. அது தீர்க்கப்பட வேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு புதிய அரசிடம் இருக்கின்றதா என்ற கேள்வியும் எம்மிடம் இருக்கின்றது.

கடந்த 7 வருடங்களாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை. மாகாண சபைத் தேர்தல் என்பது இந்த வருட இறுதியில் நடத்தப்படும் எனக் கூறுகின்றார்கள். தாமதமாக நடத்த வேண்டும் என்ற தேவை இருக்காது. அல்லது அதற்கு முன்பு நடத்தலாமா போன்ற கருத்துக்கள் எம் மத்தியில் பேசப்பட்டன.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்து முடிந்து ஓரிரு மாதங்களில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என நாம் நம்புகின்றோம். மாகாண சபைக்கு உரித்தான 1988 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியல் சாசனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைதது அதிகாரங்களும் மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும. இந்த அரசு மிக விரைவாக அந்த நடவடிக்கைகளை எடுத்தால் மாத்திரம்தான் தமிழ் மக்கள் இந்த அரசின் மீது நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரு சூழல் ஏற்படும் எனவும் நாம் கருதுகின்றோம்.

ஆகவே, அரசு வெறுமனே பேச்சில் மாத்திம் இருக்காமல் தமிழ் மக்களது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒரு புதிய அரசியல் சாசனம் கொண்டு வரப்பட வேண்டும். அது வெறுமனே சிங்கள மக்களது பிரச்சினையைத் தீர்ப்பதாக இல்லாது புரையோடிப் போயுள்ள தமிழ் மக்களது தேசிய இனப் பிரச்சினையைத் தீர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவது தொடர்பாக அரசு சரியான அறவிப்புக்களை வெளியிடுமாக இருந்தால் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியானது அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக வடக்கு - கிழக்கு இணைந்த ஒரு தமிழ் மாநிலத்தை உருவாக்கி முழுமையான சுயாட்சியை உருவாக்குவதற்கான கருத்துக்களை அல்லது அறிக்கைகளை எல்லோருடனும் இணைந்து புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் குழுவிடம் கொடுப்போம். முதலாவது இந்த அரசு குழுவை நியமிக்க வேண்டும். அதனை இரண்டு வருடங்களிலா அல்லது மூன்று வருடங்களிலா அல்லது உடனடியாக நியமிப்பார்களா என்பது எங்களுக்குத் தெரியாது.

புதிய அரசியல் சாசனம் உருவாக்கும் பட்சத்தில் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. அத்துடன் மக்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கும் விடப்பட வேண்டும். அவ்வாறு விடப்பட்டால்தான் அது நிறைவு பெறும். மக்கள் மத்தியில் சென்று அதற்கான ஆதரவைத் திரட்ட வேண்டுமாக இருந்தால் இந்த அரசு விரைவாக புதிய அரசமைப்பை உருவாக்க வேண்டும். அப்போதுதான் சாத்தியமாகலாம். காலம் செல்ல ஆட்சியின் மீதும், ஆட்சி அதிகாரம் மீதும் பல்வேறு குறைபாடுகள் வரும். அதற்கு முன்பாக அரசியல் சாசனம் வர வேண்டும் என விருப்புகின்றோம்.

அதில் முக்கியமாக தமிழ் மக்களது தேசிய இனப் பிரச்சினைக்குப்  பாதிக்கப்பட்ட அந்த மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக தமிழ் மக்கள் இந்த மண்ணில் முழுமையான சுயாட்சியோடு வாழ்வதற்குத் தேவையான விடயங்களை உள்ளடக்கிய ஓர் அரசியல் சாசனமாக இருக்க வேண்டும் என நாம் பேசியுள்ளோம். இது தொடர்பில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேசுவதற்குத் தீர்மானித்துள்ளோம்." - என்றார்.

இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், கோ.கருணாகரம், எம்.கே.சிவாஜிலிங்கம், ந.சிறிகாந்தா, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் ப.வேந்தன் உட்பட முக்கிஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.




கருத்துரையிடுக

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள் .

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.