அமெரிக்காவில் காட்டுத் தீ காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகரித்த வேகத்தில் காற்று வீசுவதால் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தீ காரணமாக தெற்கு கலிபோர்னியாவிலுள்ள 137 ஆயிரம் பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். 6,406 ஹெக்டேர் பகுதி தீக்கிரையாகியுள்ளதுடன் இந்தப் பகுதி அடிக்கடி தீப்பரவலுக்குட்படும் பகுதியாகவும் பதிவாகியுள்ளது.
இதனிடையே தெற்கு கலிபோர்னியாவில் நீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பாரிய அனர்த்தம் ஒன்றை எதிர்நோக்கியுள்ளதாகவும் தீயணைப்பு வீரர்கள் போதியளவில் இல்லை எனவும் லொஸ் ஏஞ்சலஸின் தீயணைப்புப் படையின் தலைவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் நேற்று முன்தினம் காட்டு தீ ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. தீப்பரவலினால் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மின்சாரம் இன்றித் தவித்து வருகின்றனர்.