மன்னார் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பெறப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் வெளிநாடொன்றில் இருப்பதாகவும் அவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பெறப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் மாட்டு வண்டி சவாரிப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். மாட்டு வண்டி சவாரிப் பிரச்சினையால் கடந்த 2022 ஆம் ஆண்டு இருவர் உயிரிழந்த சம்பவத்தின் சந்தேகநபர்கள் இருவரே மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் எவ்வாறாக இருந்தாலும் இந்த சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பதில் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார்.