பயங்கரவாதத் தடைச் சட்டம் மீதான நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய அரசாங்கம்!பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) அரசாங்கத்தின் கொள்கை அல்லது விஞ்ஞாபனத்தின் ஒரு பகுதி அல்ல, ஆனால் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை அது அவதானத்துடன் பயன்படுத்தப்படும் என அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று (21) நாடாளுமன்றில் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும், குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. எஸ். ஸ்ரீதரன் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் செய்வதிலிருந்து குடிவரவு அதிகாரிகள் பயணத் தடையை காரணம் காட்டி தடை செய்யப்பட்டதாக ஹக்கீம் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்தகைய தடைக்கு நீதிமன்ற உத்தரவு தேவை என்றும், அது நடைமுறையில் இல்லை என்றும் ஹக்கீம் வாதிட்டார்.
குறித்த விடயத்துக்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இது தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சபைத் தலைவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீதரன் எம்.பி.க்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதாக தெரிவித்த அவர், பாராளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வில் இது பயங்கரவாத தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது.
எனவே, இது அரசாங்கத்தின் முடிவு அல்லது கொள்கையினால் ஏற்பட்ட சம்பவம் அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.