தமிழ் அரசியில் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்கள் விரையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் செல்வரட்ணம் தனூபன் தெரிவித்துள்ளார். பெறப்பட்ட கையெழுத்துக்களுடன் கைதிகளை விரைவில் விடுவிக்க வலியுறுத்தும் மகஜர் ஒன்றும் இணைந்ததாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும் ,விடுவிக்க வலியுறுத்தி முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரால் கையெழுத்துப் போராட்டம் ஒன்று கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டு முல்லைத்தீவு வட்டுவாகலில் இம்மாதம் 20 ஆம் திகதி நிறைவு செய்யப்பட்டது.
வட மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் இந்த கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.