தமது நாட்டில் மார்பேர்க் வைரஸ் தொற்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தன்சானிய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. தன்சானியாவின் வட மேற்குப் பகுதியில் மாரபேர்க் வைரஸ் தொற்றுக்குள்ளான 8 பேர் உயிரிழந்தள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருந்த நிலையில் தன்சானியா மறுத்துள்ளது. கடந்த 15 ஆம் திகதி குறித்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இருப்பினும்; அதில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஜெனிஸ்டா மகாமா தெரிவித்துள்ளார். தன்சானியாவின் ககேரா பகுதியில் தொற்றுக்குள்ளானதால் 8 பேர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கடந்த 14 ஆம் திகதி அறிவித்தது. இந்நிலையிலேயே தன்சானிய சுகாதார அமைச்சர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சேகரிக்கப்பட்ட மாதிரிகளை தன்சானியா சர்வதேச ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் ரெடரோஸ் அதனம் நேற்று அறிவித்துள்ளார். அத்துடன் தன்சானியாவுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் உலக சுகாராத ஸ்தாபனம் வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அபிரிக்க நாடான தன்சானியாவில் கடந்த 2023 மார்பேர்க் வைரஸ் முதலில் அடையாளம் காணப்பட்டதுடன் தொற்றினால் 6 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.